லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன், மேஜர் வரன் வீரவணக்க நாள் இன்றாகும்.!
28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி’ லெப். கேணல் கில்மன் / காந்தன், மேஜர் கலைவாணன் / வரன் ஆகிய மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் ‘லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி’ லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் தலைநகர் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் மீது பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினரால் ஏற்படுத்தப்பட்டது.
காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா இராணுவ உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி – 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது.
அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல இராணுவத்தினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வுகள் அனைத்தும் லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினரால் முறியடிக்கப்பட்டன.
இறந்வ நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார்.
இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா இராணுவ உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் தளபதி லெப். கேணல் கில்மன், மேஜர் கலைவாணன் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்கள்.
தளபதி லெப். கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
லெப். கேணல் கில்மன் நினைவு சுமந்து ….!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”