ஓ… எம் அன்பு உறவுகளே,
போரின் முழுச் சுமையும்
முதுகேற்று
காப்பரண் வேலியிற் காவலிருக்கும்
எம்மவர்க்குப் பலம்சேர்க்கும்
ஈரமுள்ள இதயங்களே
இளங்காலையொன்றின்
இனிமையை இரசிக்கமுடியாது
இயங்கும் என்
கால்களுக்கும் கைகளுக்கும்
உயிர்ப்பூட்ட
உதிரத்தை சுரந்தியங்கும்
இதயவறையின் மூலையொன்றில்
உங்கள் வலியை உணர்கின்றேன்.
எமக்குத் தெரியும்
கஞ்சிக்கும் வழியில்லாக் காலத்திலும்
எமது உணவுக்காய்
உமது உணவைத் தந்து,
பேரினவாதப் பெருங்கரங்கள்
பொருள் மறுத்துக்
குரல்வளை நசிக்கையிலும்
குருதிசிந்தத் தயாராகவிருக்கும்
எமது மருந்துக்காய்
அரிசிக்கான உங்கள் பணத்தில்
சிறிதளவு அறவிடப்படுவது,
நைந்து நைந்து
முள்வேலிபட்டுக் கிழிந்து
பின் தைத்துக்
கவசமாய் நாமணிந்துள்ள உடையின்
ஒவ்வொரு அங்குலமும்
உங்கள் உழைப்பின் உப்பென்பது
நன்றாய்த் தெரியும் எமக்கு.
போரின் பெரும்பாரம்
இழப்பின் கொடுந்துயரம்
பிரிவின் பெருவலி
எல்லாம் உம்தலையில்
உம் முதுகில்.
எமது துப்பாக்கியிலிருந்து
பகைகொல்லப்புறப்படும்
ஒவ்வொரு ரவையும்
உங்கள் நாணயக் காசுகளே.
ஏழைக் குடிலெனிலும்
எம்மைப் போலொரு பிள்ளையை
விடுதலைக்காய்
உவந்தளித்த பெருமை
உங்களுக்குரியது.
நாங்கள் உங்கள் பிள்ளைகள்.
உங்கள் உழைப்பில்… உணவில்…
உடையில்
உங்கள் வறுமையில், வலியில்
துயரில்
என்றுமே எங்களுக்குப் பங்குண்டு.
விடுதலைக் கனவின் விலையாக
உவந்தளிக்கும்
எங்கள் உயிரின் உழைப்பில்
நாளை மலரும் குழந்தையொன்றுக்கு
இனிய வாழ்வைப் பரிசளிப்போம்.
அதுவரை
எமது தோளிலும்
உமது தோளிலும்
சுமக்கும் சிலுவையின் வலிகளைச்
சுகமெனவே எண்ணியிருப்போம்.
ஆக்கம் : அம்புலி.